Wednesday, December 19, 2012

அல்லாஹ்வின் வாக்கு அது ஒன்றே உயர்ந்தது (அல்குர்ஆன் - 9:40 )


திருக்குர்ஆன் மாநாடு ஏன் ?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்த்

திருக்குர்ஆன் மாநாடு ஏன்

கடவுளே இல்லை என்றொரு பிரிவும் கடவுள் இருக்கின்றான் என்றொரு பிரிவுமாக இரு சாரார் மட்டும் தான் இன்று உலகில் பரவிக்கிடக்கின்றார்கள்.
நவீன காலத்து விஞ்ஞானிகளில் அதிகமானோர் அவர்கள் எந்த நாட்டில் வசித்தாலும் எந்த மொழியைப் பேசினாலும் எந்த மதத்தில் இருந்தாலும் கொள்கையில் என்னவோ கடவுள் மறுப்பாளர்களாகவே இருக்கின்றார்கள்.
அடுத்து, கடவுள் இருக்கின்றான் எனக்கூறுவோர் அவனுக்கு இணைகளையும் உருவங்களையும் அவர்கள் மனதில் தோன்றிய பிரகாரமெல்லாம் கற்பித்துக்கொண்டு அதில் சாதிவாரியாகவும் சாதிகளின் உட்பிரிவு வாரியாகவும் மேலும் குடும்பத்திற்கென்றும் குத்திற்கென்றும் ஒவ்வொரு கடவுளாக அமைத்துக்கொண்டு மனிதர்களைவிட கடவுளின் எண்ணிக்கைதான் அதிகமென மனிதர்கள் எண்ணுமளவிற்கு இறைவனுக்கு எல்லாவற்றையுமே இணையாக்குகின்றனர்.
கடவுள் இல்லையென வாதிடுபவர்கள் தமது மனதையே கடவுளாகவும் மார்க்கமாகவும் அமைத்துக் கொண்டதால்தான் இவ்வுலகம் தாங்கள் வாழ்வை அனுபவிப்பதற்காக மட்டுமே படைக்கப்பட்டது எனக்கூறிக்கொண்டு தம் மனம்போன போக்கிலெல்லாம் வாழ்வை அனுபவித்து வருகின்றனர்.
கடவுள் உண்டெனக்கூறி அதற்கு இணைக்கற்பிப்பவர்களோ இறைவன் தான் தம்மை இயக்கிக் கொண்டிருக்கின்றான் என்ற நினைவே இல்லாமல் அவனை அஞ்சவேண்டிய முறையில் அஞ்சாமல் அதற்கு மாறாக தாமே கடவுளை இயக்கிக்கொண்டு, செய்யும் தவறுகளையெல்லாம் செய்து விட்டு கோயில்களில் கோவில் உண்டியல்களில் சில இலட்சங்களையும் கோடிகளையும் போட்டு கடவுளுக்கு லஞ்சம் கொடுத்து தப்பித்துக் கொள்ளலாம் என நினைக்கின்றனர்.
இன்று உலகில் காணப்படும் லஞ்சமும், ஊழலும், விலைவாசி ஏற்றமும், வட்டியினால் உண்டாகும் அவளங்களும், விபச்சாரமும் ஒழுக்க சீர்கேடுகளும், மதுவினால் ஏற்படும் எண்ணிலடங்கா மோசங்களும், சாதிப் பிரச்சினைகளும், திருட்டு, கற்பழிப்பு, கொலை, கொள்ளை போன்ற சமூகத் தீமைகளும் மேற்சொன்ன இறைநம்பிக்கையில் உள்ள கோளாருகளால் உண்டானவைதான்.
இச்சூழல்களில்இறைவனே இல்லை; ஒரே இறைவனைத்தவிரஎன்ற ஓரிறைக்கொள்கையில் திடவுறுதி கொண்ட ஒரு முஸ்லிமின் செயல்பாடு எவ்வாறு அமைய வேண்டும் என்பதை அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்:
மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கின்றீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதை(ச் செய்ய) ஏவுகிறீர்கள்; தீயதைவிட்டும் தடுக்கிறீர்கள்; வேதத்தையுடையோரும் (உங்களைப்போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும்; அவர்களில் நம்பிக்கையாளர்களும் இருக்கின்றனர்; எனினும், அவர்களில் பலர் பாவிகளாகவே இருக்கின்றனர். (அல்குர்ஆன் அத் 3 : வச 110)
இறைநம்பிக்கை கொண்டு மறுமையை அஞ்சி வாழும் ஒரு முஸ்லிமால் மட்டுமே இச்சூழல்களை மாற்றியமைக்க முடியும்.
முஸ்லிம்களின் (ஆட்சியின்) வீழ்ச்சியால் இவ்வுலகம் எதை இழந்ததுஎன்ற நூலில் மறைந்த மவ்லவி அபுல்ஹஸன் அலி நத்வி (ரஹ்) இதுபற்றி விரிவாக விவரிக்கிறார்.
அல்லாஹ்வை அஞ்சாமல் மறுமை வாழ்வை முற்றாக மறந்து பொருளீட்டுவதையும் உலக வாழ்வை அனுபவிப்பதையுமே தனது லச்சியமாகக்கொண்டு வாழ்பவனைக்குறித்து மாநபி (ஸல்) அவர்கள் கூறும் கருத்து பின்வருமாறு :
தங்க நாணயத்திற்கு (தீனார்) அடிமையானவன் அழியட்டும்; வெள்ளி நாணயத்திற்கு (திர்ஹம்) அடிமையானவன் அழியட்டும்; அழகான ஆடைகளை அணிய வேண்டும் என்பதற்கு அடிமையானவன் அழியட்டும்; பட்டு விரிப்புகளுக்கு அடிமையானவன் அழியட்டும்; அவன் அழியட்டும்; மீண்டும் அவன் அழியட்டும்; அவன் காலில் ஒரு முள் குத்தினால் அது வெளியே வராமல் இருக்கட்டும் எனச் சபித்தார்கள்.
முஸ்லிம்கள் இன்று என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் :
·         சிறந்த சமூகம் என குர்ஆனால் பெயரிடப்பட்ட முஸ்லிம்கள் குர்ஆன் விடுக்கும் செய்தி அடிப்படையில் தாமும் வாழ்ந்து பிறரிடமும் அதை அறிமுகம் செய்வதில் கவனமற்றவர்களாக இருக்கிறார்கள்.
·         மேற்குலகால் ஏற்பட்டுள்ள அறிவியல் விஞ்ஞான முன்னேற்றத்தால் அவர்களின் நடை, உடை, பாவனைகள் அனைத்தையுமே  பின்பற்றத்தகுந்த கலாச்சாரநெறி என்றெண்ணி அதையே தம்பிள்ளைகளுக்கு முழுநேர கல்வியாகப் பயிற்றுவித்து அதன் மூலம் உலகாயத இலாபங்களை அடைவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வாழ்கின்றனர்.
·         முஸ்லிம் தலைவர்கள் தமது பொறுப்பை விட்டு நீண்டதூரம் விலகி எதை முதலில் செய்ய வேண்டும் என்பதை முறைப்படுத்தி ஆற்றாமல் அவ்வப்போது ஏற்படும் சில வாழ்வியல் பிரச்சினைகளில் தம் முழுநேரத்தையுமே வீணாகச் செலவிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
·         மேலும் உலகமக்கள் அனைவருக்குமே நல்லுபதேசமாகத் திகழும் குர்ஆனை அவர்களிடம் அறிமுகம் செய்யாமலும் தமது மக்களுக்கே அதனை சரிவரக் கற்றுத்தராமலும் காலத்தைக் கழிக்கின்றனர்.
·         குர்ஆனின் மூல மொழியான அரபி மொழியைத் தம் சந்ததிகளுக்குக் கற்றுத்தந்து குர்ஆனை அவர்களாகவே படித்துணரும் விதமாக மேற்கொள்ளப்பட வேண்டிய முயற்சிகளிலிருந்து தவிர்ந்திருந்து அதன் கருத்துக்களுக்கும் கொள்கைக்கும் எதிராக வாதிடும் ஒரு புதிய தலைமுறையை தமது இல்லங்களிலேயே தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றனர்.
·         அரை குறையாக மார்க்கத்தை விளங்கிக் கொண்டு தம்மைத் தாமே மார்க்கத் தீர்ப்பு (ஃபத்வா) வழங்குவதில் வல்லவர்களாக நினைக்கும் ஒருசமூகம் உருவாகத் துணைபுரிகின்றனர்.
·         பிற சமூக மக்களுக்கு குர்ஆனை அறிமுகம் செய்து அவர்களின் சுக துக்கங்களில் பங்கெடுத்து அவர்களுக்கும் நேர்வழிகிடைக்க முயலாமல் உலக லாபங்களுக்காக மட்டுமே அவர்களுடன் அனுதினமும் பழகி  வருகின்றனர்.

இறுதியாக, “அல்லாஹ்வின் வாக்கு, அதுமட்டுந்தான் உயர்ந்தது (அல்குர்ஆன் 9:40)” என்பதை ஏற்றுக்கொண்ட சமூகம் அவனல்லாத யார் யார் வாக்குகளெல்லாமோ உயர்வதற்காக தம் உடல் பொருள் ஆவிகளையெல்லாம் தியாகம் செய்து வரும் இக்காலத்தில், அல்லாஹ்வின் கோபத்திலிருந்தும் தண்டனையிலிருந்தும் நம்மைப் பாதுகாத்து, அவன் அருளையும் கருணையையும் மேலும் மறுமையில் அவன் தருவதாக வாக்களித்திருக்கும் சுவனத்தையும் அடையப்பெரும் சமூகம் உருவாவதற்காகத் தூண்டப்படும் ஒரு ஒளிக்கீற்றுதான் இம்மாநாடு.
எனவே நீங்கள் ஒவ்வொருவரும் குடும்பசகிதமாக, உங்கள் சுற்றத்தோடும் நட்போடும் இம்மாநாட்டில் கலந்துகொண்டு இறைவனுக்கு மட்டுமே அடிபணிந்து வாழ்ந்து பிறர் நலனுக்காகவும் உலக அமைதிக்காகவும் வாழ்ந்துயரும் ஒப்பற்ற சமூகமாக வலுபெற்றிட வாரீர் வாரீர் என அழைக்கின்றோம்.
வல்ல ரஹ்மான் நம் எண்ணங்களைத் தூய்மையாக்கி நம் காரியங்களை எளிதாக்கி நம் செயல்களை வெற்றியாக்கி ஈருலகிலும் உயர்பதவிகளை நம் யாவருக்கும் வழங்குவானாக, ஆமீன். வஸ்ஸலாம்.
மாநாடு விபரம்: இன்ஷா அல்லாஹ்.
  நாள் : 1 ரபீஉல் அவ்வல் 1434, 13 ஜனவரி 2012 ஞாயிற்றுக் கிழமை.
  இடம் : A.S.கல்யாண மகால், வில்லாபுரம், மதுரை.
  நேரம் : காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.

இவண்
வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்த்,
127, தெற்குமாட வீதி, மதுரை-1
                                       செல்பேசி : 80129 23923 / 98423 80071.